‘‘நாங்குநேரி தொகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன்’’ காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நம்பிக்கை

நாங்குநேரி தொகுதியில் 100 சதவீதம் வெற்றிபெறுவேன் என காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கூறினார்.
ரூபி மனோகரன் பிரசாரம்
ரூபி மனோகரன் பிரசாரம்
Published on

நாங்குநேரி,

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வருகை தந்து, சாமி தரிசனம் செய்தார்.

அவரை, பதியின் தலைமை நிர்வாகி பால ஜனாதிபதி வரவேற்று, தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்தார். அதன்பிறகு வேட்பாளர் ரூபி மனோகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றேன். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம் அனைத்திலும் இந்தத் தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மக்கள் மட்டுமின்றி, தென் மாவட்ட மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த திட்டம், தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தத் திட்டம்.

படிக்காதவர்களே இல்லை

நான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக வந்தபிறகு, பணிகள் நிறைவு செய்யப்பட்டு, முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இனிவரும் காலங்களில் இங்கே இன்னும் அதிகளவில் விவசாயம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பதால், தண்ணீர் பிரச்சினை இல்லாமல் விவசாயம் செய்ய முடியும். இதனால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய எல்லாத் திட்டங்களும் குக்கிராமங்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. அதனால், மீண்டும் தி.மு.க. ஆட்சியே அமைய வேண்டும் என்கிற மனநிலையில் எல்லா மக்களும் இருக்கிறார்கள்.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் மூலம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அனைத்து மாணவ-மாணவிகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்து வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டப்படிப்பு படிக்காதவர்களே, கிராமப்புறங்களில் இல்லை என்கிற நிலை வந்துவிடும்.

மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த கல்வி உதவித்தொகை திட்டம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

100 சதவீதம் வெற்றி

நான் எம்.எல்.ஏ. ஆன தொடக்க காலத்தில், இந்த தொகுதியில் ஆங்காங்கே குடிநீர் பிரச்சினைகள் இருந்தன. அந்தப் பிரச்சினைகளை முழுவதுமாக போக்கி இருக்கின்றேன். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். நாங்குநேரி தொகுதியில் நான் உறுதியாக 100 சதவீதம் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு ரூபி மனோகரன் கூறினார்.

தொடர்ந்து, களக்காடு வடக்கு ஒன்றியம் கல்லடி, சிதம்பரபுரம், கல்லடி கீழூர், பெருமாள் குளம், மேல தேவநல்லூர், வேலவன் குடியிருப்பு, கேசவனேரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தின்போது ரூபி மனோகரன் பேசியதாவது:-

பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறது. அத்தியாவசியத் தேவைகளை அவர்கள் அந்தப் பணத்தை வைத்தே சமாளித்துக் கொள்கிறார்கள். இதனால், பல குடும்பங்கள் சிரமங்களைக் கடந்து வந்துள்ளன.

கை சின்னத்தில்...

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சர் ஆன பிறகு, மகளிரின் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவிலேயே மகளிர் உரிமைத் தொகை வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். ஏன், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில்கூட பெண்களுக்கு உதவித்தொகை வழங்க தொடங்கிவிட்டனர். இதன் மூலம் இந்தியாவுக்கே முன் மாதிரி மாநிலமாக நம் தமிழகம் உள்ளது.

எனவே நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இமான் அண்ணாச்சி

பிரசாரத்தின்போது, வேட்பாளர் ரூபி மனோகரனுடன், சினிமா நடிகர் இமான் அண்ணாச்சியும் உடன் சென்று, கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அவர் கூறுகையில், ‘‘கடந்த தேர்தலின்போதும், ரூபி மனோகரனை ஆதரித்து, உங்கள் இல்லங்களை தேடிவந்து பிரசாரம் செய்தேன். நீங்களும் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை நாங்குநேரி தொகுதியில் அவர் செயல்படுத்தி இருக்கிறார். இந்த முறையும் அவருக்கே ஆதரவு தாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com