குளுகுளு ஊட்டியில் சிலுசிலு காதல் கதை சுந்தர் சி-யின் கலக்கலில் 'காபி வித் காதல்' நவம்பர் 4-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது


சுந்தர் சி-யின் கலக்கலான இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், 'காபி வித் காதல்'. குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, கிங்க்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாதன் உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி 'காபி வித் காதல்' படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது:-

அழகான காதலை புதிய கோணத்தில் சொல்லும்போது ரசிகர்கள் நிச்சயம் சிவப்பு கம்பளம் விரிப்பார்கள். இளமையான ஊட்டியின் பின்னணியில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நந்தவனம் போன்ற குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன முரண்களும், அழகான காதலும் இணைந்த ரசனையான கலவைதான் 'காபி வித் காதல்'.

குளு குளு ஊட்டியில் சிலுசிலு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் இளமை, இனிமை தாண்டி இசையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்களின் விருப்பத்துக்குரிய யுவன்சங்கர் ராஜாவின் இசையில் 8 பாடல்கள் படத்தை இன்னும் அலங்கரிக்கின்றன. 'வின்னர்' படத்துக்கு பிறகு, அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர் சி.யுடன், யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைந்திருக்கிறார். எனவே இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பத்துடன் பார்த்து குதூகலிக்கும் வகையிலான ஜனரஞ்சமான இந்த படம் நவம்பர் 4-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது, என இயக்குனர் சுந்தர் சி கூறினார்.