

பழனி:
பழனியில், திண்டுக்கல் சாலையில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1985-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாணவரும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினருமான ராமராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தனர்.
மேலும் தங்களது பள்ளிக்கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பழனி நகராட்சி பள்ளியை முன்மாதிரி பள்ளியாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.