

சென்னை,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சமீபத்தில் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை காய்கனி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டதும் அடங்கும். இதற்கு கோயம்பேடு மார்க்கெட் சில்லரை காய்கனி கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோயம்பேடு மார்கெட்டில் இருக்கும் 1,800 சில்லரை காய்கனி கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு கடை வியாபாரி வாரத்தில் 3 நாட்கள் கடையை திறந்து வியாபாரம் செய்து கொள்ள முடியும். வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழுவின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான வியாபாரிகள் வரவேற்றனர்.
அதன்படி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் மூடப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மார்க்கெட் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதற்கு வியாபாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
இதேபோல மறு உத்தரவு வரும்வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோயம்பேடு மார்க்கெட் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.