

மாமல்லபுரம்,
தமிழகத்தில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகம் பரவி தினமும் பல மாவட்டங்களில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளதால் தமிழக அரசு நேற்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கினை ஒரு வாரம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
நேற்று தளர்வில்லா முழு ஊரடங்கினை முன்னிட்டு சென்னை- புதுச்சேரி செல்லும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து சத்தம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் பூஞ்சேரி இ.சி.ஆர். சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய நபர்களை மடக்கி பிடித்தனர். இ-பதிவு அனுமதியுடன் அத்தியாவசிய முக்கிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர். அதேபோல் மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மாமல்லபுரம் கடற்கரையில் தெற்கு, வடக்கு என கடற்கரை கோவிலின் இரு பக்கமும் மக்கள் நடமாட்டம் இன்றி காட்சி அளித்தது.
மாமல்லபுரம் கடற்கரை
கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, அர்ச்சுணன் தபசு சாலை உள்ளிட்ட இடங்களில் சிற்ப கூடங்கள் மற்றும் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தற்போது மீன்பிடி தடைக்காலம் ஒரு புறம் இருந்தாலும் ஊரடங்கு விதிகளை கடைபிடிக்கும் வகையில் மீனவர்கள் பெரும்பாலோனோர் கடற்கரை பகுதிகளுக்கு வராததால் மாமல்லபுரம் மீனவர் கடற்கரை பகுதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.
குறிப்பாக நேற்று காலையில் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் கூட்டமும் காணப்படவில்லை. மாமல்லபுரத்தில் ஊரடங்கால் பொதுமக்கள் பெரும்பாலோனோர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். குறிப்பாக மாமல்லபுரத்தில் மருந்தகங்கள், பால் கடைகள் மட்டுமே நேற்று இயங்கின.
செங்கல்பட்டில் வெறிச்சோடியது
மாமல்லபுரம் நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், தேனீர் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடி சென்னை-திருச்சி மற்றும் திருச்சி-சென்னை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.
செங்கல்பட்டு நகரில் பால் மற்றும் மருந்தக கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டன. மேலும் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் செங்கல்பட்டு நகரில் பல சாலைகள் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.