

சிம்லா,
சிம்லாவில் குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்ததால் மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள கோட்கர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று தொழிலாளர்கள் குளிரை சமாளிக்க அறைக்குள் நிலக்கரியை எரித்தனர். நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாயு அறை முழுவதும் நிரம்பியதால் சுவாசிக்க காற்று இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டாவது நாளில் உள்ளூர் கிராமவாசிகள் கதவைத் திறந்து பார்த்த போது, தொழிலாளர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.