தலைநகர் டெல்லியில் மீண்டும் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு

தலைநகர் டெல்லியில் மதுக்கடைகளை மீண்டும் அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

டெல்லியில் புதிய மதுக் கொள்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சில்லறை மது பானக் கடைகளை இனி அரசு நடத்துவதில்லை என்ற முடிவெடுக்கப்பட்டு மது பான விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டது.

இந்த கொள்கையின் கீழ் 850 மதுபான கடைகளை திறக்க தனியாருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த மதுக் கொள்கை இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இரண்டு முறை மது கொள்கையை நீட்டிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள புது மதுக் கொள்கை நாளையுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே புதிய மதுபான கொள்கையில் விதிமுறை மீறல் நடைபெற்ற தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இத்தகைய சூழலில் புதிய மதுக் கொள்கையை கைவிட அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்த டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிஸோடியா 2022-23 ம் ஆண்டுக்கான மதுக் கொள்கை இறுதி செய்யப்படும் வரை பழைய மதுக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பழைய மது கொள்கையின்படி சில்லறை மதுபான கடைகளை அரசே நடத்தும். ஊழலை தடுப்பதற்காக டெல்லி அரசு புதிய மதுக் கொள்கையை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ள துணை முதல்வர் மணிஷ் சிஸோதியா புதிய மது கொள்கைக்கு முன்பாக 850 மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ரூ.6000 கோடி மட்டுமே வருவாய் வந்த நிலையில் புதிய மதுக் கொள்கையின் மூலம் அதே அளவிலான கடைகளின் மூலமாக அரசுக்கு ரூ.9000 கோடி வருவாய் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com