பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் 441 குழந்தைகள் உட்பட 1,265 பேர் பலி!
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் மேலும் 25 குழந்தைகள் உட்பட 57 உயிரிழந்தனர்.;
Image Credit:PTI
கராச்சி,
பாகிஸ்தான் நாட்டில் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்தால் மேலும் 25 குழந்தைகள் உட்பட 57 உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,265 ஆக அதிகரித்துள்ளது. அதில் 441 குழந்தைகளும் அடங்குவர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷேபாஸ் சரிப் தலைமையில் கூடியது. அப்போது வெள்ள நிலைமையை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.57 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன என அந்நாட்டு தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.