

நியூயார்க்,
உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான போரானது ஏறக்குறைய 6 மாதங்களாக நீடித்து வருகிறது. இதனை நிறுத்துவதற்கான பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இரு நாடுகளும் போரை நிறுவத்துவதற்கான ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல் உள்ளன. அதற்கான முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இரு தரப்பிலும் போர் தீவிரமடைந்து உள்ளது.
இந்த சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று உக்ரைன் மற்றும் ரஷிய விவகாரம் பற்றி பேசினார். அவர் பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்து பகைமைகளையும் உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியேயான நடைமுறைக்கு திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது என இந்தியா கடுமையாக வலியுறுத்துகிறது.
பிரதமர் வலியுறுத்தி கூறியது போல், இது போருக்கான சகாப்தம் ஆக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் மோதலுக்கான பாதையானது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய ஒரு விவகாரம்.
இதன் வெளிப்பாடு உண்மையில் கவலை கொள்ளும்படி செய்கிறது. உலகம் முழுவதும் உலக நாடுகள் இயங்கி வரும் நிலையில், இதன் பாதிப்பு தொலைதூர பகுதிகளிலும் கூட உணர முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.