சீர்காழி: உலக நலன் வேண்டி அஷ்ட பைரவர் மகா யாகம்
சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் சொர்ண கால பைரவர் சன்னதியில் அஷ்ட பைரவர் மகாயாகம் நடைபெற்றது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருசொர்ணபுரம் எனும் காத்திருப்பு கிராமத்தில் ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தனி சன்னதியில் சொர்ண கால பைரவர் அருள்பாலிக்கிறார். இங்கு உலக நலன் வேண்டி அஷ்ட பைரவர் மகா யாகம் நடைபெற்றது.
சொர்ண கால பைரவர் சன்னதியில் 9 யாக குண்டங்களுடன் சிறப்பு யாகம் செய்யப்பட்டு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்துடன் கோவிலை வலம் வந்தனர். பின்னர் சொர்ண கால பைரவருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புனித நீரால் அபிஷேகம் நடந்தது. அதன்பின் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளில் ஆலய தர்மகத்தா ராஜராஜன், வி.எச்.பி. மண்டல செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.