மார்கழி மாத பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.;
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கான நாள் மற்றும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவிக்கும்.
அவ்வகையில் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, 3-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.43 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன.