தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சலில் பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;

Update:2025-11-20 15:23 IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று‌ ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசையான நேற்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலையில் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் மற்றும் புற்று அம்மன் ஆகிய சாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு உற்சவர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். இதனையடுத்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்