வாய் துர்நாற்றத்தை நிறுத்துவது எப்படி?
வாய் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் பலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.;
வாய் துர்நாற்றம் என்பது ஒரு அருவருப்பான விஷயம்தான். நிறைய பேர், வாய் துர்நாற்றம் தனக்கு இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடிவதில்லை. மற்றவர்களுக்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தாலும், சொல்ல மாட்டார்கள். சொல்லத் தயங்குவார்கள்.
'ஹேலிடோஸிஸ்' என்று மருத்துவ மொழியில் சொல்லப்படும் இந்த வாய் துர்நாற்றம், முக்கால்வாசி வாய் ஆரோக்கியம், வாய் பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதுதான், இந்தப் பிரச்சினைக்கான சிகிச்சையின் ஆரம்பமாகும்.
காரணங்கள் என்னென்ன?
1). வெங்காயம், பூண்டு போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டவுடன், அவை ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள் வயிற்றில் இருக்கின்ற காலம் வரை, இந்த உணவுகளின் நாற்றம், சுவாசம் வழியாக வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் , இது பெரும்பாலும் சகிக்கக் கூடிய நாற்றமாகத்தான் இருக்கும்.
2). வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு இல்லாமை. வாய் சுத்தம் இல்லாமை, சரியாக, ஒழுங்காக பற்களைத் துலக்காமல் இருப்பது, அவ்வப்பொழுது பல் டாக்டரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது, போன்றவைகளும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆனால் இது சகிக்க முடியாத நாற்றமாக இருக்கும்.
3). பொதுவாக, சாப்பிட்டபின் பல் துலக்காமல் , வாயைக் கொப்பளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், வாயில் உணவுத் துகள்கள் பற்களுக்கிடையில் தங்கிவிடுகின்றன. இந்த உணவுத் துகள்கள் தங்கியிருக்கும் இடத்தில்தான் கெட்ட பாக்டீரியாக் கிருமிகள் உட்கார்ந்து, வளர்ந்து, பெருகிவிடுகின்றன. இதேபோல் வாயில் ஈறு, பற்கள், நாக்கு, கன்னத்தின் உள்பகுதி போன்றவைகளின் இடுக்குகளில் சேரும் உணவுத்துகள்கள் கெட்டுப் போய், அழுக ஆரம்பித்துவிடுகிறது. இதுதான் வாயில் ஒருவித அருவருக்கத்தக்க வாசனையையும், சுவையையும் ஏற்படுத்துகிறது. இதற்கு அடுத்தகட்டம்தான் துர்நாற்றம் ஆகும்.
4). செயற்கை பல் செட் மாட்டியிருப்பவர்கள் சரியாக ஒழுங்காக கழுவாமல் உபயோகித்துக் கொண்டே இருந்தால், அதில் பாக்டீரியாக்கிருமிகள் , உணவுத்துகள்கள் இவைகளெல்லாம் மிகச் சுலபமாகச் சேர்ந்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
5). வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேர்ந்துவிடுவது கூட ஒரு காரணம் ஆகும்.
6). ஈறுகளில் சீழ்பிடித்து, வீங்கிப்போய் , ஈறுநோய் ஏற்பட்டால் , வாய்நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
7). வாய் உலர்ந்து போதல் , இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். வாயில் எச்சில் அதாவது உமிழ்நீர் போதுமான அளவு சுரக்காமல் , மிகக்குறைவாக சுரந்தால், வாய் தானாகவே உணவுப்பொருட்களை சரியாக சுத்தம் பண்ணி, உள்ளே தள்ள முடியாது. உணவுத் துகள்களை பல் இடுக்குகளில் சேரவிடாமல் பண்ணமுடியாது. வாய் உலர்ந்து போவது என்பது சில மருந்துகள் சாப்பிடுவது, எச்சில் சுரப்பிகள் நோய் வாய்ப்படுவது, மூக்கின் வழியாக சுவாசிக்காமல், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வாய் வழியாக சுவாசிப்பது இவைகளினால் ஏற்படலாம்.
8). சிகரெட் , சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து, நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். இவைகளும் கூட கெட்ட நாற்றத்தை உண்டுபண்ணும்.
9). நெஞ்சில் , மூக்கில் , சுவாசக்குழாயில் நாள்பட்ட சளி, சைனஸ் நோய் இருப்பவர்களுக்கும் , ஜீரண மண்டல பிரச்சினை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் , பல் சொத்தை, பற்களையும் , வாயையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாதவர்கள் இவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
10). காலை வேளைகளில் வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். காபி குடித்தபின் அதிகமாக இருக்கும். சிகரெட் புகைத்தபின் அதிகமாக இருக்கும். பூண்டு, வெங்காயம் போன்றவைகளைச் சாப்பிட்ட பின் அதிகமாக இருக்கும்.
சிகிச்சை என்ன?
பற்கள், வாய், ஈறு, பற்காறை, பல்லில் கறை, முதலிய பிரச்னைகளினால் வாய் நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால் , பல் மருத்துவ சிகிச்சை நிபுணரை உடனே சந்தித்து முழு சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். எது, எப்பொழுது சாப்பிட்டாலும் , சாப்பிட்ட பிறகு பற்களை துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது. தினமும் இருமுறை பல் துலக்கினால் கெட்ட பாக்டீரியாக்கள் சேர வாய்ப்பு இருக்காது.
நிறைய கெட்ட பாக்டீரியாக் கிருமிகள் நாக்கின் மேல்தான் உயிர் வாழ்கின்றன. அதனால் தினமும் பல் துலக்குவதும் , நாக்கை வழித்தெடுத்து சுத்தம் பண்ணுவதும் நல்லது. பல் செட் போட்டிருப்பவர்கள் , அதைக் கழற்றி நன்றாகக் கழுவிய பின் மறுபடியும் உபயோகிகவேண்டும். புகைப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்தவேண்டும். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறமாதிரி உள்ள புளிப்பு உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கேரட், ஆப்பிள் போன்றவைகளை கடித்து, மென்று சாப்பிட நிறைய உமிழ்நீர் தேவை.
தினமும் சிறிதளவு பச்சை புதினாக் கீரை, பச்சை கொத்தமல்லி கீரை, மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இரவில் பால் , பழங்கள் , இனிப்பு வகைகள் சாப்பிட்டுவிட்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளித்து, பற்களையும் துலக்கிவிட்டுத் தான் படுக்கைக்குப் போக வேண்டும். எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் நிறைய நேரம் இருந்தால் , இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி, அதுவும் வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிதளவு கிராம்பு, சீரகம் , ஏலக்காய் இவைகளில் ஏதாவதொன்றினை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம்.
சிலர் வருடக்கணக்கில் கூட பல் டாக்டரிடம் போகவே மாட்டார்கள். பல்வலி வந்தால் மட்டுமே போவார்கள். மற்றபடி எனக்கு பல் சுத்தமாகத் தான் இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது. வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே, தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
-டாக்டர் எஸ். அமுதகுமார்.