டெல்லி கார்குண்டு வெடிப்பு; அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்

அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார்.;

Update:2026-01-17 19:58 IST

 புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை உயர் கல்வி கற்ற டாக்டர்கள் பலர் குழுவாக சேர்ந்து அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 2 டாக்டர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய டாக்டர் உமர், அல்பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி இருந்தார்.

இதனால் அந்த பல்கலைக்கழகம் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகம் மீதான நிதி மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். ஆதாரங்களின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழக அறக்கட்டளை தலைவர் சித்திக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பரிதாபாதில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் 54 ஏக்கர் நிலம், கட்டிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.140 கோடி ஆகும். சோதனை நடத்தி இரண்டு மாதங்களுக்கு பிறகு அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சித்திக் மற்றும் அவரது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பலா அறக்கட்டளை ரூ.110 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்