டெல்லி கார் குண்டு வெடிப்பு: பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.
சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பயங்கரவாதி உமர் முகமது தான் தற்கொலை குண்டாக வெடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்த நிலையில், தற்கொலைப் படை தாக்குதலை நியாயப்படுத்தி 2 மாதங்களுக்கு முன், டெல்லி கார் குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது பேசிய பழைய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், “தற்கொலை பற்றி அனைவராலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்கொலை குண்டு வெடிப்பு என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. தற்கொலை குண்டுவெடிப்புக்கு எதிராக பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒருநபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்று முன்பே தெரிந்தும் அந்த காரியத்தை செய்வதால் அதை தியாகச் செயல்தான் என்று சொல்ல வேண்டும் அதனால் மரணத்திற்கு அஞ்சாதீர்கள்” இவ்வாறு அதில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை வெளியிட்டவர் யார்? எவ்வாறு வெளியானது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.