ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம்: சீனாவின் கருத்தை திட்டவட்டமாக நிராகரித்த இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் கூறியுள்ளது.;

Update:2025-12-31 15:02 IST

 

Photo Credit: PTI

புதுடெல்லி,

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு–காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியா கொடுத்த பதிலடியில் அந்த நாட்டின் விமானப்படைத் தளம் கடுமையாக சேதமடைந்தது. இந்தியாவின் பதிலடி தீவிரமாக இருந்ததை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (டிஜிஎம்ஓ), இந்திய டிஜிஎம்ஓவை தொடர்பு கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுகோள் விடுத்தார். இதை இந்தியா ஏற்றது. இதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது.இந்தியா–பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

இருப்பினும், இந்தியா–பாகிஸ்தான் போரை தாம் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குதித்துள்ள சீனா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது தாம் மத்தியஸ்தம் செய்ததாக கூறியுள்ளது.சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கூறியதாவது:“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு உள்ளூர் போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அடிக்கடி வெடித்துள்ளன. வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான பதற்றம், இஸ்ரேல்–பாலஸ்தீனம் பிரச்சினை, கம்போடியா–தாய்லாந்து பிரச்சினை ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம்” என்று அவர் கூறினார். சீனாவின் இந்தக் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.“இதுபோன்ற கூற்றுகளை நாங்கள் ஏற்கனவே மறுத்துள்ளோம். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு பிரச்சினைகளில் மூன்றாம் தரப்புக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்