போலீஸ் நிலையத்தில் பெண் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி சம்பவம்
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.;
மும்பை,
மராட்டிய தலைநகர் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம், காசா போலீஸ் நிலையத்தில் 40 வயது போலீஸ்காரர் பொறுப்பாளராக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வழக்கு தொடர்பாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளிக்க போலீஸ் நிலையம் வந்தார். அப்போது, அங்கிருந்த போலீஸ்காரர் அந்தப்பெண்ணின் அழகில் மயங்கி சபலம் அடைந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள அறைக்கு அழைத்துச்சென்று அந்தப்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது தெரிவித்தால் பொய் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலுடன் காசா போலீஸ் நிலையம் சென்று அங்கிருந்த சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து, இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே, அதிலும் போலீஸ் நிலையத்தில் வைத்தே பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.