2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: லிப்ட் ஆபரேட்டருக்கு 14 ஆண்டுகள் சிறை

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.;

Update:2025-12-14 00:49 IST

செங்கல்பட்டு,

சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி அவரது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலாயுதம் (வயது 56) என்பவர் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 30.10.2023 அன்று காலை சிறுமி கீழ் தளத்தில் விளையாடிவிட்டு 5-வது தளத்தில் உள்ள தனது வீட்டுக்கு லிப்ட் மூலம் ஏறி வந்த போது லிப்ட் ஆபரேட்டர் வேலாயுதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் செம்மஞ்சேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நசிமா பானு, வேலாயுதத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தார்.

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 8 வயது சிறுமியையும் கடந்த 31.10.2023 அன்று வேலாயுதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை செம்மஞ்சேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நசிமா பானு, வேலாயுதத்துக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் செலுத்த உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை வழங்க தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்