பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை பலி: தாய் பால் கொடுத்த போது சோகம்
பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தை தாய் பால் கொடுத்த போது பரிதாபமாக உயிரிழந்தது.;
கோவை,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அனில் (வயது 21). இவரது மனைவி பூஜா (20). இவர்களுக்கு பிறந்து ஒரு மாதமேயான ஸ்ரீனி என்ற குழந்தை இருந்தது. இந்த நிலையில் பூஜாவுக்கு கடுமையான தலை வலி மற்றும் கால் வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்லடத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து பூஜா கடந்த மாதம் 28-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பூஜா தனது குழந்தை அழுததால் தாய் பால் கொடுத்தார்.
பின்னர் குழந்தையும், தாயும் தூங்கியதாக தெரிகிறது. காலை 7 மணியளவில் எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவின்றி கிடந்தது. இதை அனில் மற்றும் பூஜா பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர் உடனே வந்து குழந்தையை பரிசோதனை செய்து பார்த்தார். அப்போது குழந்தை இறந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அனில் மற்றும் பூஜா கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் பால் குடித்துவிட்டு உடனே தூங்க வைத்ததால் குழந்தை உயிரிழந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான முழு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.