திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி உள்ளது: அன்புமணி ராமதாஸ் பேச்சு

தனது நடைபயணத்தை தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் நேற்று நிறைவு செய்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி உள்ளது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
Published on

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பிரசார பயணத்தை திருப்போரூர் தொகுதியில் கடந்த ஜூலை 25-ந்தேதி தொடங்கினார். 100 நாட்கள் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றார். அவர் தனது இந்த நடைபயணத்தை தர்மபுரியில் நேற்று நிறைவு செய்தார்.

இதையொட்டி தரம்புரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;-

தமிழ்நாட்டில் இன்றைக்கு நடைபெறும் கொடுங்கோல் ஆட்சியான தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக 100 நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். எனது இந்த நடைபயணத்துக்கு வழக்குகள், கட்டுப்பாடுகள் என்று எவ்வளவோ தடைகள் வந்தது.

எனினும் என்னுடைய இந்த நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 28 ஆண்டுகள் நான் பொது வாழ்க்கையில் இருந்து வருகிறேன். இது என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நடைபயணம். இந்த 3 மாதத்தில் அனைத்து மாவட்ட பிரச்சினைகளும் எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது.

தேர்தலில் தி.மு.க.வை விரட்டி அடிக்க போகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாது. தி.மு.க. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. 505 வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். 13 சதவீத வாக்குறுதிகள்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 100-க்கு 13 மதிப்பெண்தான். எனவே பெயிலான கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு விடமாட்டோம்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தி.மு.க. 'டெபாசிட்' இழக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரிமைகளை மீட்டேடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com