பொங்கலுக்கு சென்றவர்கள் திரும்ப வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு 18-ந்தேதி சிறப்பு ரெயில்
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள், சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில், நெல்லையில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரம் வரும் ஒரு வழி சிறப்பு ரெயில் (வண்டி எண்.06178), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்த ரெயிலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தெற்கு ரெயில்வே மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்களை அறிவிக்குமா? என்று பயணிகள் பலரும் எதிர்பாத்தனர்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06160) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.