சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
கூட்டணி குறித்து நல்ல முடிவெடுப்பேன் என ராமதாஸ் பேசினார்.;
சேலம்,
சேலத்தில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
இன்று பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பொதுவாக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில், அந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம். இங்கே பேசியவர்கள், பொதுவாக நிர்வாகக் குழுவில், ஒரு கட்சியை எப்படி நிர்வாகம் செய்வது என்று பேசிவருகிறோம். இன்றைக்கு நிர்வாக குழுவில் பேசப்பட்ட செய்தியை உள்வாங்கி செயற்குழுவில் பேசப்பட்டது. அனைவரும் சிறப்பாக பேசினீர்கள். வரவேற்கத்தக்க கருத்துகள். மிகப்பெரிய வெற்றியை அடைய அது செயல்படும். ஒரு கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட குழு பொதுக்குழு. அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், எதைப் பேசி எதை விடுவது என்று எனக்குள்ளே ஒரு குழப்பம்.
எனக்கு இருக்கும் ஆதங்கத்தை கொட்டி, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு மணி நேரம் தேவை. அந்த வகையில், பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்தது, எந்தக் கூட்டணி என்பது. எனக்கு அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள். எப்போது கூட்டணியை அறிவிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல முடிவெடுப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நாம் நிச்சயம் பெறுவோம். ஒரு குழு, கூட்டம், கும்பல், அது நான் வளர்த்த பிள்ளை, பொறுப்பு கொடுத்த பிள்ளை இன்று தூற்றுகிறார்கள். மிகவும் கேவலமாக பேசுகிறார்கள். எனக்கு ஒரு நாள் தூக்கம் வந்தது. கனவில் எனது தாய் வந்து, ஏன் அழுகிறாய் என்று கேட்டார். (இந்த நேரத்தில் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் விட்டு கதறி அழுதார்) மகனை சரியாக வளர்க்கவில்லை. மார்பிலும், முதுகிலும் ஈட்டியை வைத்து குத்துகிறார் என்றேன்.
அவருக்கு நான் என்ன குறை வைத்தேன். எல்லாம் செய்திருக்கிறேன் என்றேன். நீ ஒரு குறையும் வைக்கவில்லை என்றார். ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார். 30 ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்த ஜி.கே.மணியை தரக்குறைவாக பேசுகிறார்கள். என்னையும் நேரடியாக தாக்குகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் என்னுடைய சொந்தங்கள்தான். எந்த சமுதாயமாக இருந்தாலும் எனது உறவுகள்தான். மூத்த டாக்டர்களை பார்க்க சென்றால், அன்புமணி ஏன் இப்படி செய்கிறார். 5 ஆண்டுகள் பொறுக்கக்கூடாதா என்று கேட்கின்றனர். அவரை மாற்ற வழியில்லை என்று நான் கூறினேன். இந்த கூட்டத்தை பார்க்கும்போது 100-க்கு 95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் நிற்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. செலவு செய்து கூட்டத்தை கூட்டி பிரமாண்டத்தை காட்டுகிறார். இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும். இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியை தரும். என் பின்னால் வரும் மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை.
ஒரு மூத்த டாக்டரிடம் ஒருவர் வைத்தியம் பார்க்க சென்றுள்ளார். அவரிடம், டாக்டர் ராமதாசுக்கு எத்தனை பையன் என்று கேட்டுள்ளார். ஒரு பையன் என்றால் பொறுத்து போகக்கூடாதா என்று கேட்டுள்ளார். நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஆசைப்பட்டால், இந்திய அளவில் பதவி பெற்றிருப்பேன். அந்த சத்தியத்தால் அன்புமணிக்கு பதவி கொடுத்தேன். அவரை டாக்டராக்கினேன். 36 வயதில் மத்திய மந்திரியாக்கினேன்.
ஆனால், இப்போது என்னை அவ்வளவு கேவலமாக பேசுகிறாய். இதற்கு எல்லாம் காலம் பதில் சொல்லும். நீங்கள் வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அயராது பாடுபடவேண்டும். நான் கடந்த 10 நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கருத்து கேட்டேன். மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏன் என்றால், நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும். அப்படிப்பட்ட சூழல் வந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது. பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூக்கம் வருகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது. மகிழ்ச்சி வெள்ளம் கிடைக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.