“உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்..” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.;

Update:2025-08-26 07:09 IST

கோப்புப்படம்

சென்னை,

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு இருக்கிறார். திருச்சி துறையூரில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 1,330 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதன் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. சாலைகளில் ஆம்புலன்ஸ்கள் வந்தால் வழிவிட்டு விலகுவது தான் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் மரபு.

ஆனால் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, இதுகுறித்து கூட தெரியவில்லை. அவர் சாலையில் நின்று பேசும்போது வந்த ஆம்புலன்ஸ் டிரைவரிடம், “இனி நான் பேசும்போது ஆம்புலன்ஸ் வந்தால் அதில் உள்ள டிரைவர் அதே ஆம்புலன்சில் நோயாளியாக செல்வார்'' என்று மிரட்டினார். உயிர் காக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களை இது போல மிரட்டலாமா? அதன் தொடர்ச்சியாக திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் டிரைவர்கள்-பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்