தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அதிகாரிகளை தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை - ஐகோர்ட்டு எச்சரிக்கை

உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என்று ஜகோர்ட்டு கூறியுள்ளது.;

Update:2025-12-11 07:55 IST

கோப்புப்படம் 

சென்னை ஐகோர்ட்டில், வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான 2007-ம் ஆண்டு பட்டியலில் தனது பெயர் உள்ளது. தன் பெயரை 2006-ம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர் பெயரை 12 வாரங்களில் 2006-ம் ஆண்டு பட்டியலில் சேர்க்க வேண்டும். அவருக்கு வழங்க வேண்டிய உரிய பண பலன்களை வழங்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ராஜாகுமார் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “உத்தரவை அமல்படுத்த ஏற்கனவே 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் 6 மாதங்களாகியும் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், தேர்தல் பணி காரணமாக உத்தரவை அமல்படுத்த இயலவில்லை என்று என விளக்கமளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஜகோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது.

மனுதாரருக்கு சொற்ப தொகைதான் பணப்பலன்களாக வழங்க வேண்டியது வரும். அதை அமல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது? இதுபோல ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கடும் தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த வழக்கில் 2 வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்" என எச்சரிக்கை செய்தனர்.

பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கை 4 வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம். ஐகோர்ட்டு பிறப்பிக்கும் தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம். அல்லது மேல் முறையீடு செய்யலாம். இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் தீர்ப்பை அமல்படுத்தியே ஆகவேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளரை அறிவுறுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்