ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.;
சென்னை,
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை கேட்டு வந்தது. இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை அறிய மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. 2029-ம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.