உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
நீலகிரியில் நேற்று பெய்த மழையால் உதகையில் ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.;
நீலகிரி,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அடர்லி மற்றும் ஷில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையேயான மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை உதகைக்கு புறப்பட்ட ரெயில், மண் சரிவு காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு திரும்பியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், சீரமைப்பு பணிகள் காரணமாக உதகை மலை ரெயில் சேவை இன்று 2-வது நாளாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் விழுந்துள்ள மணல் மற்றும் கற்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.