வெடிகுண்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்: தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடியில் 2 பேர் வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.;
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரம்பட்டி பகுதியில் வைத்து கடந்த 9.10.2025 அன்று அதிக சத்தத்துடனும், புகை மற்றும் நெடியுடனும் வெடிக்கக்கூடிய வெடிகுண்டை சட்டவிரோதமாக தயாரித்து, அதை வெடிக்க செய்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய வழக்கில் தூத்துக்குடி அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் குருஸ் அம்புரோஸ் (வயது 19) மற்றும் திருநெல்வேலி வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர்பாண்டியன்(25) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதீர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்புராஜ், ஜெஸ்லின், தலைமை காவலர் பேச்சிமுத்து மற்றும் காவலர்கள் மீனாட்சிசுந்தரம், மருதுபாண்டியன் ஆகியோர் அடங்கிய போலீசார் மேற்சொன்ன தலைமறைவான குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு கடந்த 19.11.2025 அன்று மேற்சொன்ன 2 பேரையும் கைது செய்தனர்.
மேற்சொன்னவாறு சட்ட விரோதமாக வெடிகுண்டு தயாரித்து வெடித்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்ததற்காக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று மேற்சொன்ன போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.