ஜூன் 30 வரை குறு சிறு, நடுத்தர, பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.;

Update:2025-06-19 16:59 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு நிதிக் கழகம் ஆகும். தமிழ்நாடு அரசு நிறுவனமான இந்நிறுவனம் 1949ம் ஆண்டு துவங்கப் பெற்று மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழ்நாட்டில் 75 வருடங்களை கடந்து தொழில் துறைக்கு சேவை புரிந்து வருகிறது.

இக்கழகம் குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தூத்துக்குடி கிளை அலுவலகத்தில் (முகவரி: 4/35 NPS காம்ப்ளக்ஸ் தூத்துக்குடி) சிறப்பு குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் 2.6.2025 முதல் 30.6.2025 வரை (அலுவலக வேலை நாட்களில்) நடைபெற உள்ளது.

இக்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நிதியாண்டு 2025-26ல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியமாக ரூ.150 லட்சங்கள் வரையும், உற்பத்திச் சார்ந்த குறுந்தொழில்களுக்கு தமிழக அரசின் மூலதன மானியமாக 25 விழுக்காடும், கூடுதல் மானியமாக 10 விழுக்காடும் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 விழுக்காடும் சிறப்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரிய வாய்பினை தொழில் முனைவோர் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகைதந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0461- 3500032 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்