“பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க உதவிய கைரேகை..” - ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் பேட்டி
தனது போலீஸ் பணியில் இது ஒரு சவாலான வழக்கு என்று ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்தார்.;
கடந்த 1995 முதல் 2005 வரை வடமாநிலங்களைச் சேர்ந்த 'பவாரியா' கொள்ளையர்கள், தமிழகத்தில் பல கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி பீதியை ஏற்படுத்தினர். அதில் முக்கியமாக கடந்த 2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அடுத்த ஒரு மாதத்திற்குள் ராஜஸ்தான், அரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவான நிலையில், 2 பேர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் நவம்பர் 24ந்தேதி அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்திருந்தது.
முன்னதாக சுதர்சனம் கொலை வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மூல காரணமாக இருந்த முன்னாள் டி.ஜி.பி. ஜாங்கிட் நேற்று சென்னை கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
இதேபோன்று, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் தனிப்படையில் இடம்பெற்றிருந்த போலீசார் சிலரும் வந்திருந்தனர். இந்த வழக்கில் 3 பேர் குற்றவாளி என நீதிபதி அறிவித்ததை தொடர்ந்து ஜாங்கிட் தன்னோடு பணியாற்றிய போலீஸ் படையினருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேபோன்று, கோர்ட்டுக்கு வந்திருந்த சுதர்சனத்தின் மகனும் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான விஜயகுமார், ஜாங்கிட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த வழக்கில் தாங்கள் சந்தித்த சவால்கள் குறித்து ஜாங்கிட் நிருபர்களிடம் கூறும்போது, ‘எனது போலீஸ் பணியில் இது ஒரு சவாலான வழக்கு. தமிழகத்தில் உள்ள அத்தனை குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகளை புரட்டிய போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. சுதர்சனம் வீட்டில் பதிவான கைரேகைகளை தமிழகத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளுடன் ஒப்பிட்டபோது, எதுவும் ஒத்துப்போகவில்லை. இதனால், வட இந்தியாவில் உள்ள முக்கிய கொள்ளை கும்பலின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தோம்.
அப்போது தான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிறையில் இருந்த ஒரு கைதியின் கைரேகையோடு ஒத்து போனது. தூக்கமில்லாமல் பல இரவுகள் அலைந்து திரிந்த எங்களுக்கு இந்த கைரேகை தான் கை கொடுத்தது. இதன்பின்பு, எங்கள் விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. எனது சிறப்பு படையில் இருந்த அத்தனை போலீசாரும் மிக சிறப்பாக செயல்பட்டனர். இந்த தீர்ப்பை நினைத்து பெருமைபடுகிறோம் என்றார்.
சுதர்சனத்தின் மகன் விஜயகுமார் கூறும்போது, ‘உண்மையிலேயே இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான போலீசார் திறம்பட செயல்பட்டனர். இதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பில் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.