அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.;
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்கள் தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி முதுநிலை சிகிச்சை கண்காணிப்பாளர் (Senior Treatment Supervisor-STS) பணியிடம்-1, டி.பி. சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) பணியிடங்கள்-2, டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator-BPMU) பணியிடம்-1, இடைநிலை ஹெல்த் புரோவைடர் (Mid-level Health Provider) பணியிடங்கள்-2, துப்புரவாளர் (Cleaner) பணியிடம்-1, மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) பணியிடம்-1 ஆகியவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 2025 டிசம்பர் 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ, தபால்/ மின்னஞ்சல் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.