வங்காளதேச வன்முறைக்கு பத்திரிகையாளர் பலி; இந்து வாலிபரை கொன்று, கம்பத்தில் தொங்க விட்டு, உடலை எரித்த கொடூரம்

இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.;

Update:2025-12-20 03:26 IST

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலையில் மாணவர் போராட்டம் வெடித்தது. ஹசீனாவுக்கு எதிரான இந்த போராட்டம் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர்.

இவர் இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்து விட்டார். அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது.

இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இந்த சூழலில், வங்காளதேசத்தில் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர் துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அவர், மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டுள்ளது. பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். வன்முறை கும்பல், தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ ஆகிய இரு பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடியது. பத்திரிகை வளாகத்தில் தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்