பழிக்குப்பழியாக.. அமெரிக்க கப்பல்களை தாக்குவோம்; ரஷியா மிரட்டல்
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றியும் ரஷியா யோசனை செய்யும் என கடுமையுடன் கூறியுள்ளார்.;
மாஸ்கோ,
ரஷியாவின் மரைனிரா என பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க படையினர் சமீபத்தில் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
முதலில் பெல்லா 1 என்ற பெயருடன் அழைக்கப்பட்ட அந்த கப்பல் ரஷிய கொடியுடன் சென்றது. எனினும், தொடர்ந்து அதனை கண்காணித்தபடியே சில நாட்களாக பின்தொடர்ந்து சென்று பின்னர் அதனை அமெரிக்கா சிறைபிடித்தது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அது ரஷிய பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலாகவே எடுத்து கொள்ளப்படும் என அந்நாட்டின் சார்பாக, ரஷிய அரசின் டூமா குழு துணை தலைவரான அலெக்சி ஜுராவ்லெவ் பேசியுள்ளார்.
இதற்கு பழிக்குப்பழியாக அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றியும் ரஷியா யோசனை செய்யும் என கடுமையுடன் கூறியுள்ளார்.