புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை - டொனால்டு டிரம்ப்
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 411வது நாளாக போர் நீடித்து வருகிறது.;
வாஷிங்டன்,
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 411வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். விரைவில் உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ரஷிய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ வீடு மீது உக்ரைன் கடந்த 29ம் தேதி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. 91 டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டன. புதின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் வீட்டின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், புதின் வீட்டின் அருகே ஏதோ நடந்துள்ளது. ஆனால், புதின் வீட்டை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதுபோன்று எங்களுக்கு தெரியவில்லை. புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை’ என்றார்.