ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகள்.. ரோகித் சர்மாவும், கோலியும்.. - கம்பீர் பேட்டி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 3-வது ஒருநாள் போட்டி முடிந்ததும் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.;

Update:2025-12-08 16:14 IST

விசாகப்பட்டினம்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் 270 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து 271 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா நல்ல அடித்தளம் அமைத்தனர். 61-வது அரைசதம் அடித்த ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து களம் புகுந்த விராட் கோலி நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

வெறும் 39.5 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதும், விராட் கோலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வென்று இருந்தன. அத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-2) கண்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசினார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ரோகித் சர்மாவும், விராட் கோலியும் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். தங்களது அனுபவத்தை ஓய்வறையில் இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முக்கியமானதாகும். இருவரும் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அதனை தொடருவார்கள் என்று நம்புகிறேன். அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். நாம் எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்