இலங்கை - நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ரத்து

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியுள்ளது.
Published on

பல்லேகலே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இலங்கை வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் - டிம் ராபின்சன் களமிறங்கினர். இதில் ராபின்சன் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 2-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த யங் - நிக்கோல்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது.

நியூசிலாந்து 21 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. யங் 56 ரன்களுடனும், நிக்கோல்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் இந்த ஆட்டம் கை விடப்படுவதாக (ரத்து) அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com