விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட தலைமை அலுவலகம் முன்பு நேற்று அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாதந்தோறும் 1ந் தேதி ஓய்வூதியம் வழங்கக்கோரியும், பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய நிலுவைத்தொகை ஆகியவற்றை தராததை கண்டித்தும், பஞ்சப்படி உயர்வு மற்றும் 14 மாத நிலுவைத்தொகை வழங்கக்கோரியும், ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். விழுப்புரம் கிளை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார்.
மாநில துணை செயலாளர்கள் சகாதேவன், கோவிந்தசாமி, லட்சுமிநாராயணன், இமயவரம்பன், துணைத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
போராட்டக்குழுவினர் மதிய உணவை அவர்களே சமைத்து சாப்பிட முடிவு செய்தனர். இதற்காக அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை கொண்டு வந்து சமைக்க தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் உணவு தயார் செய்து போராட்ட இடத்தில் வைத்தே அனைவரும் மதிய உணவு சாப்பிட்டனர். அதன் பிறகும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் சேசையன், பழமலை, சின்னராசு, கலியமூர்த்தி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கருணாமூர்த்தி, கணேசன், பலராமன், பிச்சாண்டி, சுந்தரம் உள்பட விழுப்புரம், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களை சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பலராமன் நன்றி கூறினார்.