மும்பை,
பிரசவம் முடிந்த 10 நாளில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலியானார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய், சேய்க்கு டெங்கு
மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்தவர் தீபா மவுரியா(வயது35). இவர் கடந்த 2 வாரத்திற்கு முன் பிரசவத்திற்காக முல்லுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதில், கடந்த 16-ந் தேதி தீபா மவுரியாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அவர் கோமா நிலைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து குழந்தைக்கும் டெங்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தாய் பலி
இதையடுத்து தீபா மவுரியா, குழந்தையுடன் சிகிச்சைக்காக முல்லுண்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை பிறந்த 10 நாளில் பெண் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பாண்டுப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.