மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வியாபாரிகளுக்கு 10 நாட்கள் கால அவகாசம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல்மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் கடந்த ஒரு மாதமாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை அலுவலர்களால் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், கடைகளில் காய்கறி பழங்கள் வாங்கும் போது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தோம். அதற்கு 2 மாத காலம் வரை அவகாசம் வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் 10 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.