மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் ரூ.149¾ கோடி அரசு நிலம் மீட்பு

கடந்த 9 மாதங்களில் பெங்களூருவில் ரூ.149¾ கோடி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு நகர கலெக்டர் மஞ்சுநாத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் உள்ள பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு தெற்கு, எலகங்கா, ஆனேக்கல் ஆகிய தாலுகாக்களில் அரசு நிலங்கள் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு நகர கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள்.

அதன்படி கடந்த ஆண்டு (2021) ஜூன் மாதம் 31-ந் தேதி முதல், இந்த ஆண்டு மார்ச் 25-ந் தேதி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 365.36 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. அதன்மதிப்பு ரூ.149 கோடியே 67 லட்சத்து 87 ஆயிரம் ஆகும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அவற்றை பராமரிப்பதும், மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும் சவாலாக உள்ளது. விவசாயம், தற்காலிக கொட்டமைகள் அமைப்பது, குடிசைகள் அமைப்பது என பல வழிகளில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.