பேட்டை:
பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் கருங்காடு ரோடு பகுதியில் ரோந்து சென்றார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்தனர். விசாரணையில், பேட்டை பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்ற குரங்கு மாரியப்பன் (வயது 32) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குரங்கு மாரியப்பனை கைது செய்து, அவரிடம் இருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் சமாதானபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்த மகாராஜன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனையில் ஈடுபட்ட அருணகிரிநாதர் தெருவை சேர்ந்த பால்ராஜ் (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.