மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

நாங்குநேரி:

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தாமரைகுளம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கலீல்ரகுமான் (வயது 52). இவர் இரட்டை ரெயில் பாதை பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 27-ந் தேதி நாங்குநேரி அருகே உள்ள பானான்குளத்தில் கலீல்ரகுமான் பணி தொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலீல் ரகுமான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் கலைஞர் காலனி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் சிங்காரம் (62). இவர் நேற்று மாலை அங்குள்ள 4 வழிச்சாலையை கடக்க முயற்சி செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த கார், சிங்காரம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.