மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு.

நாகப்பட்டினம்,

நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை அருகே பப்ளிக் ஆபீஸ் சாலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நாகை தொகுதி துணை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துவளவன், ஊடக செய்தி தொடர்பாளர் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். ஊரடங்கு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட தொகுதி துணை செயலாளர் சுரேஷ் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.