திருபுவனை
திருபுவனை அருகே திருவண்டார்கோவில் சின்னபேட் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் ராஜலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9, 7, 6 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜலட்சுமி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன்பிறகு 3 குழந்தைகளையும் கூலிவேலைக்கு சென்று சங்கர் வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று இரவு கொத்தபுரிநத்தம் சாராயக்கடை அருகே சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரை இழந்து 3 பெண் குழந்தைகளும் ஆதரவின்றி நிகதியாக நிற்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.