திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு, குடும்ப பிரச்சினை காரணமாக வல்லத்து நம்பிகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரை அவரது மனைவி உள்பட 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் முத்துராஜ்(30), கொலை செய்யப்பட்ட முருகனின் மனைவி ஞானஅகிலா(34) மற்றும் பஞ்சுராஜன்(33) ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி செல்வம் நேற்று குற்றவாளிகள் 3 பேருக்கும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான கொலை செய்யப்பட்ட முருகனின் மனைவி ஞானஅகிலாவுக்கு கடத்தல் குற்றத்திற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் வீரவநல்லூர் காவல்துறையினர், இந் வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (தற்போது சேரன்மகாதேவி AWPS), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த காவலர் விக்னேஷ் ஆதிமூலம், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை குற்றத்திற்காக, இந்த ஆணடில் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற ஆண்டில் (2025) 27 கொலை வழக்கில் 105 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சரித்திர பதிவேடு உடையவர்கள் மட்டும் 28 நபர்கள் ஆவர். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.