புதுச்சேரி

சுகாதார மையத்தில் திருடிய 4 பேர் கைது

அாயாங்குப்பத்தில் சுகாதரா மையத்தில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் தினசரி சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு 4 வாலிபர்கள் சிகிச்சை பெற்றுக் திரும்பி சென்றுள்ளனர். மறுநாள் காலையில் பணிக்கு வந்த மருத்துவ அதிகாரி தாரணி, தனது ஸ்டெதஸ்கோப் காணாமல் போனது குறித்து இரவு நேர செவிலியர்களிடம் விசாரித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிகிச்சைக்கு வந்தவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் அந்த மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். காலில் அடிபட்டு சிகிச்சைக்காக வந்த நபர்களில் ஒருவர் ஸ்டெதஸ்கோப், சாவி, பூட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த கணபதி என்கிற கவிராஜ் (வயது 28), அவரது உறவினர்களான கரசூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பிரகாஷ் (வயது30), பிரசாந்த் (வயது 28) திலாஸ்பேட்டை பகுதி சேர்ந்த மணிகண்டன் (வயது 39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.கைதான 4 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.