மாவட்ட செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து நேற்று அதிகாலை சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடை எண் 9-ல் வந்து நின்றது. பயணிகள் அனைவரும் ரெயிலை விட்டு இறங்கி சென்று கொண்டிருந்தனர்.

அந்த ரெயிலில் வந்து இறங்கிய வாலிபரை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்டிரல் ரெயில்வே போலீசார் சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரித்தனர்.அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 3 பொட்டலங்களில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் நேசமணி நகர் சுந்தரம் காலனியை சேர்ந்த அஜித் (வயது 26) என்பதும், அவர், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை ரெயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.