மாவட்ட செய்திகள்

கம்பத்தில் வீட்டில் இருந்த 50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

கம்பத்தில் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்த போது, ஒரு வீட்டில் இருந்த 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கம்பம்,

உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம் தலைமையில் கம்பம் நகராட்சி ஆணையாளர் சங்கரன் மேற்பார்வையில் கம்பம் நகராட்சி பகுதிகளில் ஊழியர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய டயர்கள், மண்பானைகள் மற்றும் சிமெண்டு தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து பார்வையிட்டனர்.

மேலும் வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டிக்கு பின்புறம் உள்ள பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றினர்.

இதில் 4-வது வார்டுக்கு உட்பட்ட மாலையம்மாள்புரத்தில் குவிந்த கிடந்த குப்பைகை-யும், தேங்கி இருந்த மழை நீரையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோபால் என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பாலித்தீன் பைகள், தம்ளர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்த ஆய்வின் போது நகராட்சி சுகாதார அலுவர் சுருளிநாதன், சுகாதார ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.