கும்பகோணம்:-
பொது வேலை நிறுத்தத்தையொட்டி கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
சாலை மறியல்
மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி கும்பகோணத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் கண்ணன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் கண்ணையன், ஏ.ஏ.எல்.எல்.எப். மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அலுவலர் சங்கத்தினர் பங்கேற்பு
இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கூட்டுறவுத்துறை, நீதித்துறை, தொழில் பயிற்சி அலுவலர்கள் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் உள்பட 70-க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொது வேலை நிறுத்தம் காரணமாக கும்பகோணம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலக ஊழியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.