திருவெண்ணெய்நல்லூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து விழுப்புரத்திற்கு பஞ்சு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. சரக்கு வாகனத்தை திட்டக்குடி நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த பூராசாமி மகன் செந்தமிழ்வாணன் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் செந்தமிழ்வாணன், அவருடன் வந்த நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த தங்கராசு மனைவி காந்திமதி, தர்மலிங்கம், தங்கவேல் மனைவி கொளஞ்சியம்மாள், தங்கராசு, ஜெயராமன் மனைவி சாந்தி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.