மும்பை,
மும்பையில் 60 ஆயிரத்து 473 சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
60,473 சிலைகள்
மும்பையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நேற்று பொதுமக்கள் வீடுகள், மண்டல்களில் பிரதிஷ்டை செய்த சிலைகளை 1 நாளுக்கு பிறகு நீர் நிலைகளை கரைத்தனர். முதற்கட்டமாக சுமார் 6 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்தது.
ஆனால் சிலை கரைப்புக்காக மக்கள் விடிய, விடிய நீர் நிலைகளில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து ஒரே நாளில் 60 ஆயிரத்து 473 சிலைகள் கரைக்கப்பட்டதாக இன்று மாநகராட்சி தெரிவித்தது.
இதில் 60 ஆயிரத்து 122 வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய சிலைகள் ஆகும். மற்ற சிலைகள் மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
செயற்கை குளம்
செயற்கை குளத்தில் 24 ஆயிரத்து 196 வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளும், 172 மண்டல் சிலைகளும் கரைக்கப்பட்டன. மற்ற சிலைகள் குளம், கடல் போன்ற இயற்கை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சிலை கரைக்க கடல், குளம் போன்ற 73 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 152 செயற்கை குளங்களும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.